இச்செய்தி திரு செந்தில் வேல் அவர்கள் இட்ட பதிவு மெகஸ்தெனிஸ் நூல் இன்டிகா தொடர்பான பாண்டியர் வரலாற்றுக்கு என் விளக்கக் குறிப்பே .
பண்டேயா - பாண்டிமா தேவி
தடாதகைப் பிராட்டி.
இச்செய்தி இன்டிகா என்ற நூலில் கிமு 320 அளவில் எழுதப்பட்டுள்ளது . சந்திரகுப்த மௌரியரின் அவைக்கு வந்த மெகஸ்தனிஸ் எழுதிய நூல் அது . இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும் அவர் பாண்டிய நாட்டைப்பற்றிய பல செய்திகளைச் சொல்கிறார் . பெண்ணால் ஆளப்பட்டது என்பது அவற்றுள் ஒன்று . இதே காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அர்த்த சாஸ்திரம் தமிழகத்தின் வணிக மதிப்பை மட்டுமே சொல்கிறது . ஆனால் இது பிற்காலத்தில் எழுதப்பட்டது என்றே ஆய்வாளர் மதிப்பிடுகின்றனர் . ஆனால் , மெகஸ்தெனிஸ் இந்தியா வருவதற்கு முன்பே தமிழகத்தைப்பற்றி மிகுதியாகக் தெரிந்து வைத்துள்ளார் என்று புரிகிறது . ஏனெனில் மகதத்தை கிரேக்கர் அறிவதற்கு முன்பே அவர்கள் தமிழகத்தை அறிவார்கள் .
கிமு 1000 அளவிலேயே சாலமன் அரசர் காலத்திலிருந்தே கிரேக்கர் பொனீசியர் வழியே தமிழகத்துடன் வணிகம் செய்து வந்தனர் . கிமு 500 அளவிற்குப் பிறகு கிரேக்கர் நேரடி வணிகம் செய்தனர் . மிளகு , முத்து , சந்தனம் , ஏலம் வணிகத்தில் கடல் கொள்ளாத பாண்டிய நாட்டுத் துறைமுகங்களே பெரும் பங்காற்றின . கொற்கை அப்போது பெரு நகரமாக -- துறைமுகமாக இன்னும் மேற்கே பலகாத தொலைவு பரந்திருந்தது . பெருநகர் புகார் -- காவிரிப்பூம்பட்டினம் போல பரந்து விரிந்த நகரம் . ஆதிச்சநல்லூர் பல நூறு ஆண்டுகள் கொற்கையின இடுகாடாக இருந்த இடமே . அத்தகைய பெருநகரம் இல்லாமல் ஆதிச்சநல்லூர் போன்ற 113 ஏக்கர் விரிந்த இடுகாடு இருக்க முடியாது . மேலும் பல்வேறு உலக இனமக்கள் அங்கு தாழிகளில் புதைக்கப்பட்டிருந்த கரணம் அதுவே .
எனவே , பாண்டிய நாடு கடல் வணிகத்தால் மேலைநாடுகளில் புகழ் பெற்றிருந்தது . கிமு 6 ஆம் நூற்றாண்டில் ஆண்ட சுமேரிய அசூர் பணிபால் என்ற மன்னன் ஏடுகளில் பாண்டியநாடு பாடே என்றும் , தலைநகர் கூடல் கூடே என்றும் குறிக்கப்படுவதாக ரொமிலா தாபர் குறிப்பிட்டு பாண்டியரின் பெருமைக்கு அவர்கள் நாகரிகப் பாங்கே காரணம் என்கிறார் . பாண்டிய நாட்டுடன் தங்களுக்குரிய நட்புறவால் தோன்றிய மரபுச் செய்திதான் கிரேக்கர் அறிந்திருந்த பாண்டேயா கதை . கிரேக்கர் தங்களுக்குள் இத்தகைய தொன்மத்தைப் பெற்றிருந்தும் தெளிவாகிறது . இதில் வரும் கிராகிளிஸ் கிரேக்க நாட்டு வீரர் அல்ல . கிரேக்கர் தாங்களறிந்த எல்லா வீரர்களையும் ஹர்குலிஸ் , ஹிராகிளிஸ் என்று ஒப்பீட்டுப் பெயர் கொடுத்து அழைப்பர் . அத்துடன் அல்லி அரசாணி நாடோடிப் பாடல் கதை , அர்ஜூனன் பிற்காலக் கதை , பாண்டிய நாட்டின் நமக்குத் தெரியாத மறந்துபோன பெரு வீரரான மன்னன் வரலாறு , பேரரசி தடாதகைப் பிராட்டி வரலாறு ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை . தடாதகை வரலாற்றைத் தமிழர் தொன்மமாகத் தொடரவிட்டிருந்தால் தமிழர் வரலாற்றுத் தொன்மம் ஆகி இருக்கும் .
மதுரை மீனாட்சியை பிராமணியப்படுத்த தடாதகையார் வரலாற்றை அவருக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன என்ற அபத்தப் புராணக் கதையாக மாற்றி பிராமணீயப் புராணிகர்கள் வரலாற்றை அழித்துவிட்டனர் . தடாதகை ஆணுக்குச் சமமான மறக்குலப்பெண் ஆகவே நாணம் அறியாதவர் அவர் எந்த ஆண்டவனைக் கண்டு நாணம் அடைகிறாரோ அப்போது பெண்மை பெறுவார் என்பதே உண்மைத் தமிழரது தொன்மமாக இருக்க முடியும் . தடாதகை படைநடத்திச் சென்ற இடங்கள் அவரது தொன்மக் கதையில் உள்ளன . அதன் வருணனை கடல் கொண்ட பாண்டிநாட்டின் இலங்கை உட்பட கிழக்கு நிலப்பகுதியே என்பதில் ஐயமில்லை . அப்போது இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே சதுப்பு நிலங்களும் , காடுகளும் , மணற்பாங்கான பாலைகளும் இருந்தன என்று தெரிகிறது . பாண்டிச்சேரிக்குக் கிழக்கில் கடலில் அணந்துபோன எரிமலை வாய்கள் இருப்பதாக கடற்தரை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர் . அத்தகைய பெருவீரப் பெண்மணியான தடாதகைப் பிராட்டியையே பாண்டேயா என்று மெகஸ்தெனிஸ் குறிப்பது என்பது என் கருத்து . அவரது தந்தை புகழ் பெற்றதொரு மாமன்னர் ஆக இருக்க வேண்டும் . மெகஸ்தனிஸ் இன்டிகா குறிப்பின் அடிப்படை இதுதான் . தடாதகைப் பிராட்டியே பண்டேயா என்ற பெயரில் மெகஸ்தெனிஸ் குறிக்கிறார் .
இன்னொரு செய்தி : சங்க காலப் பாடல்களைத் தங்கள் அரசர்கள் , தங்கள் நாட்டு நலம் , தமக்குப் பிடித்த பாடல் , தமக்குப் பெரும்புலவர் என்று தோன்றிய சிலர் என்றில்லாமல் , தொன்மையான படல்களையும் , திணை துறை என்ற வேறுபாடு இன்றி எண்ணிக்கை பார்க்காமல் அப்போது கிடைத்த அனைத்துப் பாடல்களையும் பல தொகுதிகளாகத் தொகுத்து வைத்திருந்தால் பழம்பாடல்கள் அழியாது காப்பாற்றப் பட்டிருக்கும் . தமிழக வரலாறு விளக்கம் பெற்றிருக்கும் .
பூர்ண சந்திர ஜீவா முக நூலில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக